ஒடிசா ரயில் விபத்து எதிரொலி - தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் பணிநீக்கம்

 
odisha

ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தின் எதிரொலியாக தென்கிழக்கு ரெயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹனாகா பஜார்  ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், இதுவரை 291 பேர் உயிரிழந்த நிலையில்,  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்டைந்தனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தின் எதிரொலியாக தென்கிழக்கு ரெயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்கிழக்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக அனில் குமார் மிஸ்ராவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.