எம்ஜிஆர் சிலைக்கு ஆளுநர் தமிழிசை மரியாதை : புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு !!

 
ttn

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர். எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு இன்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி , மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் ,மாண்புமிகு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  சாய் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ttn

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "நான் பார்த்த வகையில் மனிதநேய மிக்க ஒரு தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதலைமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி குழந்தைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பும் இல்லாமல் உணவு கிடைக்கச் செய்தவர். சாமானிய மக்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்தவர். அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். இன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் வேக சக்தி தொடர்பான இணைய மாநாடு நடைபெற இருக்கிறது. நாட்டில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விரைவுபடுத்துவதற்காக “வேக சக்தி“ என்ற திட்டத்தை பாரதப் பிரதமர் தொடங்கி இருக்கிறார். இதில் 16 அமைச்சர்கள் ஒன்றிணைந்து அனைத்து வகையிலும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக திட்டமிடுகிறார்கள்.

ttn

புதுச்சேரி அதில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. இது புதுச்சேரிக்குக் கிடைத்த பெருமை. அந்தப் பெருமை மிகு மாநாட்டில் நானும் முதலமைச்சரும் பங்கு கொள்கிறோம். புதுச்சேரிக்கு சாலை, ரயில், விமானம் மற்றும் கடல்வழி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த ஆலோசனை செய்யப்படும்.புதுச்சேரி விமான நிலையத்தை விரிவு படுத்துவது, காரைக்காலில் விமான நிலையம் கொண்டு வருவது, புதிய ரயில் பாதைகள் அமைப்பது, அதிக சாலை வசதிகளை ஏற்படுத்துவது, துறைமுகங்களை பலப்படுத்துவது என்று அனைத்து வகையிலும் ஒட்டுமொத்தமான புதுச்சேரியின் வளர்ச்சிக்கு இந்த “வேக சக்தி“பயன் தரும். பாரத பிரதமர் இதற்காக ரூ. 100 லட்சம் கோடி முதலீடு செய்ய இருக்கிறார். இதில் புதுச்சேரி மிக முக்கிய இடம் பெறுகிறது.காமராஜரின் தொண்டர் என்ற வகையில் தமிழக அரசின் காமராஜர் விருது பெறும் குமரி அனந்தன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் " என்றார்.