"பெட்ரோல் ஜிஎஸ்டிக்குள் வருமா?" - சட்டென கேள்வி கேட்ட வைகோ... தடாலடி பதில் சொன்ன அமைச்சர்!
மாநிலங்களவை எம்பி வைகோ பெட்ரோலியத் துறை அமைச்சரிடம், ''எக்சைஸ் வரியைக் குறைத்த பின்பு, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தேவை. எந்தெந்த மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தன? மேலும் விலையைக் குறைக்க முடியாததற்குக் காரணங்கள் என்ன? பொதுமக்கள் நலன் கருதி, பெட்ரோல், டீசல் விலையை, ஜிஎஸ்டி வரி வரையறைக்குள் கொண்டுவரும் திட்டம் உள்ளதா? இல்லை என்றால், அதற்கான காரணங்கள் தருக'' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ''பெட்ரோல், டீசல் விலையை சந்தை நிலவரப்படி தீர்மானிக்க, 2010 ஜூன் 26, 2014 அக்டோபர் 19 ஆகிய நாள்களில் அரசு முடிவு செய்தது. அன்று முதல், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பன்னாட்டு நிலவரத்திற்கு ஏற்பவும், வரிக் கட்டமைப்பு, அயல்நாட்டுச் செலாவணி மதிப்பு, உள்நாட்டுப் போக்குவரத்து மற்றும் இதுபோன்ற காரணிகளின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை, அவ்வப்போது மாற்றி அறிவித்து வருகின்றன. எனவே, பன்னாட்டுச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் விலை மாறுகின்றது.
2017 ஜூன் 16ஆம் தேதி முதல் நாடு முழுமையும், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை ஆய்வு செய்து, மாற்றங்களை அறிவிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. 2021-ல் மத்திய அரசு, பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 விலைக் குறைப்பு செய்தது. பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், பண வீக்கத்தைக் குறைக்கவும், ஏழை, எளிய மக்கள் நுகர்வினை மேம்படுத்தவும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்கள், மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளன; இதர மாநிலங்கள் குறைக்கவில்லை.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 279A இன் படி, பெட்ரோலியக் கச்சா எண்ணெய், உயர்தர டீசல், மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), இயற்கை எரிகாற்று மற்றும் வான் ஊர்திகளுக்கான எரிபொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை, எந்த நாள் முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது குறித்து ஜிஎஸ்டி மன்றம்தான், முடிவு செய்து அறிவிக்க வேண்டும். மேலும், மத்திய ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 9(2) இன் படி, மேற்கண்ட பொருள்களை, ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு, ஜிஎஸ்டி மன்றத்தின் பரிந்துரை தேவை. ஆனால் இதுவரை, அத்தகைய பரிந்துரை எதுவும், ஜிஎஸ்டி மன்றத்திடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை'' என்றார்.