நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் ஒத்துக்கொள்ள வேண்டும் - உச்ச நீதிமன்றம் கண்டனம்
நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். நீட் முறைகேடு வழக்கில், ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை 2 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசடி செய்த ஒருவர் மருத்துவராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய நபர் சமூகத்திற்கும் அமைப்புக்கும் எவ்வளவு தீங்கு விளைவிப்பார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற குழந்தைகள் கடினமாக படிக்கின்றனர். அதை யோசியுங்கள்.

நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவிகிதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும் . ஒரு தனிநபர் ஒட்டு மொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக்கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது என்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தேசிய தேர்வுகள் மையத்திற்கும், மத்திய அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது.


