#Breaking மீண்டும் எம்.பி.பதவியை பெற்றார் ராகுல் - மக்களைவை செயலகம் அறிவிப்பு

 
tn

136 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப் பெற்றார்.

 மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்,  ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனைக் காரணம் காட்டி அவர் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த நிலையில், சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி  குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த  குஜராத் நீதிமன்றம், சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, மனுவையும்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதன் காரணமாக ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். 

tn

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,  2 ஆண்டுகால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி மீண்டும் எம்.பியாக தொடர்வார் என்றும், மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவரை மக்களவை உறுப்பினராக தொடர வழிவகை செய்யுமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.

Rahul

இந்நிலையில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து மீண்டும் எம்.பி. பதவியை பெற்றுள்ளார் ராகுல் காந்தி. இது குறித்த அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து தகுதி நீக்கத்தை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது மக்களவை செயலகம்.  இதன் மூலம் 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராகுல் காந்தி எம்பி ஆகி நாடாளுமன்றம் செல்கிறார்.