இந்தியாவில் 200 பேர் ஒமைக்ரானால் பாதிப்பு... 77 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - மத்திய அரசு
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்டாவை வைரஸைவிட பல மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்து வரும் நிலையில், அதற்கேற்பவே வைரஸ் பரவல் விகிதமும் அதிகரித்து வருகிறது. முதல் தொற்று கண்டறியப்பட்டு 4 வாரங்களிலேயே 12 மாநிலங்களில் 200 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா , உலகிலேயே மிக அதிக விகிதத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திய நாடாக இருந்து வருகிறது. இதன் மூலம் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.. கடும் கட்டுப்பாடுகளை மீறியும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் ஒமைக்ரான் இந்தியாவில் காலூன்றிவிட்டது. அவர்களுடன் முதல்நிலை, இரண்டாம் நிலை தொடர்பாளார்கள் மூலம் தொற்று மேலும் அதிகரித்து வருகிறது.
ஒமைக்ரான், உலகளவில் 91 நாடுகளுக்கு பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் 12 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் 200 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 54 பேர், டில்லியில் 54 பேர், ராஜஸ்தானில் 18 பேர், கர்நாடகாவில் 19, தெலுங்கானாவில் 20 பேர், குஜராத்தில் 14 பேர் , கேரளாவில் 15 பேர், உத்தரபிரதேசத்தில் 2 பேர் மற்றும் ஆந்திரா, சண்டிகர், தமிழகம், மேற்குவங்கத்தில் தலா ஒருவர் என 200 பேர் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 28 பேர் குணமடைந்திருக்கின்றனர். மேலும் ராஜஸ்தானில் 18 பேர், கர்நாடகாவில் 15 பேர், டெல்லியில் 12 பேர் , மேற்கு வங்கம், ஆந்திராவில் தலா ஒருவர் குணமடைந்துள்ளனர். அதோடு உத்தர பிரதேசத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 2 பேரும் குணமடைந்துள்ளனர்.