கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா.. இந்தியர்களுக்கு அனுமதி இல்லை!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவிலிருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக். ஜலசந்தி கடற்பரப்பில் கச்சத் தீவு அமைந்துள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் 1934-மஆ ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது.
கடலில் இயற்கை சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், அதிக அளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் இங்கு வழிபாடு நடத்திய பிறகே கடலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் யாழ்ப்பாணம் ஆட்சியர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
இதில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும். கொரோனா பரவலால் இந்திய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதிகபட்சமாக இலங்கை பக்தர்கள் 500 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்ததால் 2021ஆம் ஆண்டு பிப்.26,27 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கச்சத்தீவு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.