இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் "எஸ்கேப்".. கதிகலங்கும் கர்நாடகா - விசாரணைக்கு உத்தரவு!
உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரான் கொரோனா இந்தியாவிற்குள்ளும் நுழைந்துள்ளது. அதுவும் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வெளியானது முதல் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பெங்களூருவுக்கு வருகை தந்த 100 நபர்களில், 10 பேர் மட்டும் தலைமறைவாகிவிட்டனர். அதேபோல உத்தரப் பிரதேசத்தில் 13 பேர் மாயமாகியுள்ளனர்.
அவர்களை சுகாதார துறை அதிகாரிகள் வலைவீசி தேடிவருகின்றனர். ஒருவேளை அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்தால், அதன் வேகமாகப் பரவும் தன்மையால் பலருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த விவகாரமே இந்தியாவைப் பதைபதைக்க வைத்துள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றவருக்கு ஒமைக்ரான் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து துபாய் வழியாக கடந்த 20ஆம் தேதி பெங்களூரு வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. அந்தச் சமயம் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை. இருப்பினும் அவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். அதேபோல 23ஆம் தேதி அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததால் 27ஆம் தேதி அந்த சான்றிதழைக் காட்டி மீண்டும் துபாய்க்கு சென்றார். இதனிடையே ஒமைக்ரான் கண்டறியப்பட, அவர் போனாலும் அவரது மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இச்சூழலில் அவரது மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்கு ஒமைக்ரான் கொரோனா இருப்பது டிச.2ஆம் தேதி உறுதியானது. இந்தியாவில் முதன்முதலில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது இந்த நபருக்கு தான். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர், பெங்களூருவிற்கு பயணியாக வந்தவர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இரு வேறு முடிவுகள் ஏன் வெளியானது, சம்பந்தப்பட்ட ஆய்வகம் தவறாக நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்துவிட்டதா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தற்போது அவருக்கு நெகட்டிவ் என சான்றிதழ் கொடுத்த ஆய்வகத்தின் மீது விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.