மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை வருகிற 15-ந் தேதி வரை நீட்டிப்பு!

 
manipur

மணிப்பூரில் வன்முறை காரணமாக இணைய சேவைக்கான தடை வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இதனையடுத்து இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி மைதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடைபெற்றது.  இந்நிலையில், மைதேயி சமூகத்தினரை பட்டியலின பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நடத்திய பேரணிக்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் வெடித்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.  இந்தக் கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வர வழைக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள மாநில அரசு பரிந்துரை செய்துளது. 

இந்நிலையில்,  மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.  இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தடை இம்மாதம் 15-ந் தேதி பிற்பகல் 3 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை பிறப்பித்துள்ளது.