தீடிரென கறுப்பாக மாறிய கமெங் ஆறு... செத்து கரை ஒதுங்கிய மீன்கள் - சீனாவின் சதியா?
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினைகளைக் காட்டிலும் சீனாவுடன் தான் பெரும் பிரச்சினை இருக்கிறது. மிகவும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடியதாக எல்லைகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தக் கூடிய சக்தி இந்தியாவிடம் இருக்கலாம். ஆனால் சீனாவை வீழ்த்துவது சவாலான காரியம். இந்திய அரசும் இதை அறியாதது அல்ல. அதனால் தான் சீனாவுடன் மென்போக்கை கடைப்பிடிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க இந்திய எல்லைகளில் சீனா அத்துமீறி நுழைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு மோதல் அனைவருக்கும் நியாபகம் இருக்கலாம். அதேபோல அருணாச்சலப் பிரதேசத்திலும் மோதல் போக்கு நீடித்துவருகிறது. இந்தியப் பகுதிகளை சீனா உரிமை கோரி வருகிறது. இதற்கு அச்சாரமாக எல்லைப் பகுதிகளில் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தளவாடங்கள் அமைப்பது, பீரங்கிகள் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை நிலைநிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள கமெங் ஆற்றில் மீன்கள் செத்து கரை ஒதுங்குவது சீனாவின் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. அதேபோல ஆற்றின் நீர் கறுப்பு நிறமாகவும் மாறியிருக்கிறது. எல்லைப் பகுதியில் சீனா சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் தான் நீரின் நிறம் கறுப்பாக மாறியதாகவும், மீன்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு செத்து கரை ஒதுங்குவதாகவும் கரையோர கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக இந்திய அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். இருப்பினும் செத்து மிதக்கும் மீன்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.