பொதுஇடங்களில் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - கேரள அரசு அறிவிப்பு..

 
குப்பை


கேரளாவில் பொது இடங்கள், ஆறு, ஏரி உள்ளிட்ட  நீர்நிலைகளில் குப்பையை கொட்டுபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

கேரளாவில் ஏற்கனவே பொது இடங்கள், ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் குப்பை  கொட்ட மாநில அரசு தடை விதித்து உள்ளது.  ஆனாலும் கூட இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் சிலர் குப்பைகள், கழிவுகளை பொது இடங்களில்  கொட்டிச் செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள அரசு குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.   இதுகுறித்து  கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குப்பை, கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் பற்றி புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களுடன் உள்ளாட்சித்துறை அலுவலகங்களின் செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், தகவல் தரும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

பினராயி விஜயன்

குப்பை கொட்டுபவருக்கு அபராதமாக விதிக்கப்படும் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2500 வரை தகவல் தருபவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்கான வாட்ஸ்அப் எண்கள், மெயில் ஐ.டி. ஆகியவை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும்.  பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு குறைந்தது ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.