வெப்பத்தால் தகிக்கும் இந்தியா... 15% அதிகரித்த பாதிப்புகள் - எச்சரிக்கும் லான்செட் ஆய்வு!
1990ஆம் ஆண்டை காட்டிலும் இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக மருத்துவ ஆய்வு பத்திரிக்கையான தி லான்செட் கூறியிருக்கிறது. 38 கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐநாவை சேர்ந்த அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மனிதர்களின் உடல்நலத்திற்கும் காலநிலைக்கும் இடையில் இருக்கும் தொடர்பு குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் உடல்நலம் மற்றும் பருவநிலை மாறுபாடு குறித்து தி லான்செட் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில், "கடந்த ஆண்டில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக, 29,500 கோடி அளவிலான உழைக்கும் நேரம் வீணாகிவிட்டது. குறிப்பாக மனிதவளத்தைச் சார்ந்திருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் தான் பெரும்பாலான உழைப்பு நேரம் வீணாகியிருக்கிறது. உலகின் சராசரி வேலைநேர இழப்பு 216 முதல் 261 மணி நேரமாக இருந்த நிலையில் அதைவிட 2.5 முதல் 3 மடங்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக வெப்பம் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்புகளும் இந்த நாடுகளில் உயர்ந்துள்ளது.
1990ஆம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் தற்போது இந்தியா வெப்பத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 310 கோடி பேர் உலகளவில் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களே அதிகம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில்தான் காற்று மாசு மூலம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தான் இந்தியா, பிரேசில் நாடுகளில் மிகப்பெரிய அளவில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.