மக்களவை ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்திவைப்பு..
எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினரின் தொடர் அமளியால் மக்களவை ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கியது. நடாளுமன்ற இரண்டாவது அமர்வு தொடங்கி 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் முடங்கியுள்ளது. கடந்த வாரங்களில் அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தி பிரான்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டி குறிப்பிட்டு, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. இதில் மக்களவையில் மூன்று மசோதாக்களையும், மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்களையும் அறிமுகப்படுத்தி அதன் மீது விவாதம் நடத்த அரசு தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் 12-வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. நாடாளுமன்றம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மக்களவை மீண்டும் கூடிய பின்னரும் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.