மக்களவை ஒத்திவைப்பு - நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 12 மணிக்கு தொடக்கம்!

 
Om Birla

கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை தொர்பாக நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடங்கின. மத்திய அரசுக்கு எதிரான இந்தியா கூட்டணி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் கடந்த 26 ஆம் தேதி வழங்கிய நிலையில் அதன் மீதான விவாதம் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் பதிலளிக்க உள்ளார். அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

parliament

இதனிடையே, நாடாளுமன்றத்தின் இன்றைய அவை நிகழ்வுகள் தொடங்கின. மக்களவை தொடங்கிய 2 நிமிடங்களுக்குள், எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 12 மணிக்கு தொடங்கவுள்ளது.