"வீட்டு வாசலுக்கே வரும் ரேஷன்; 42,000 பேருக்கு வேலை” - தூள் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்!
மேற்கு வங்கத்தில் DuareRation (துவேர் ரேஷன்) என்ற பெயரில் வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கிவைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 10 கோடி மாநில மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் டீலர்களுக்கான கமிஷன் தொகையை குவிண்டால் ஒன்றுக்கு 75 ரூபாயிலிருந்து 150 ரூபாயக உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. ஏனெனில் இந்த திட்டத்தின் முக்கிய பணியைச் செய்வதே டீலர்கள் தான்.
அவர்கள் தான் நேரடியாக வீட்டிற்குச் சென்றே மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குபவர்கள். டீலர்கள் ஒவ்வொருவரும் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தங்களுக்கு உதவும் பொருட்டு குறைந்தபட்சம் இரண்டு நபர்களை நியமித்துக் கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரம் ரூபாயை அரசு செலுத்தும். மீதி சம்பளத்தை டீலர்கள் வழங்குவார்கள். தற்போது 21 ஆயிரம் டீலர்கள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு கீழ் 42 ஆயிரம் பேர் வேலை செய்வார்கள். இதன்மூலம் உள்ளூர் இளைஞர்களும் பயன்பெறுவார்கள் என்பதால் இது மிகச்சிறப்பான திட்டமாக இருக்கும் என முதலமைச்சர் மம்தா பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்காக 160 கோடி ரூபாய் செலவளிக்கும் அரசு, டீலர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்கிறது. தற்போது 21 ஆயிரம் டீலர்கள் தான் இருக்கிறார்கள் என்பதால், அனைவர் வீட்டிற்கும் ரேஷன் பொருட்கள் வழங்குவது சாத்தியமில்லை.
ஆகவே டீலர்கள் வரவேற்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் புதிய தொழில் முனையும் நோக்கில் இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என முதல்வர் கூறியுள்ளார். இப்போதைக்கு ஒரு தெருவை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ரேஷன் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விநியோகம் நடைபெறும் என அரசு கூறியுள்ளது.