மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

 
manish sisodia manish sisodia

மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி அரசு மீது பாஜக அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.  டெல்லியில் மதுபான கொள்கையை தளர்த்தி ரூ.1000 கோடி வரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டிய நிலையில், துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதேபோல் டெல்லி மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி தொடர்பாக மணிஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறையும் கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மணிஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றன. அவர் ஜூன் 2-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் இருக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேட்ட கேள்விகளையே சிபிஐ மீண்டும் மீண்டும் கேட்பதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் ஜாமீன் மனுவில் அவர் கூறியிருந்தார். ஆனால் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மணீஷ் சிசோடியா சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என் கூறியது.