சிபிஐ கைது செய்ததை எதிர்த்து மணிஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு - மாலை விசாரணை
மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு, சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதில் அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவிற்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சிபிஐ சந்தேகிக்கித்தது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது. மணிஷ் சிசோடியாவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் விமர்சித்து இருந்தார்.
கைது செய்யப்பட்ட சிசோடியாவை வரும் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவனியூ சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, மணிஷ் சிசோடியா தற்போது சிபிஐ காவலில் உள்ளார். இந்நிலையில், சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து மணிஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இன்று மாலை விசாரணை நடத்த உள்ளது.