தெலங்கானாவில் பயங்கர தீ விபத்து... இந்தியாவின் பழமையான கிளம் முழுவதும் எரிந்து நாசம்...

 
தெலங்கானா தீ விபத்து

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பழமையான கிளப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில்  எரிந்து நாசமாகின.


செகந்திராபாத்தில் இந்தியாவின் பழமையான கிளப் ஒன்று அமைந்துள்ளது. 1878 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட  இந்த கிளப், செகந்திராபாத் நகரின் மையப்பகுதியில் சுமார் 22 ஏக்கரில் அமைந்துள்ளது.  இந்நிலையில்  இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த கிளப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தெலங்கானா தீ விபத்து

கிளப்பில் இருந்த பாதுகாப்பு குழுவினர் தீ விபத்து குறுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராணுவ தீயணைப்பு வாகனம் உள்பட 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.  சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.  ஆனால் முதல் தளத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டிருப்பது காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெலங்கானா தீ விபத்து

3 தளங்களை கொண்ட இந்த கட்டிடம் சுமார் 60 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இந்த தீ விபத்தில்  கட்டிடம்  முழுவதுமாக சேதமடைந்ததாகவும், சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  5000 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கும்  இந்த கிளப் ஐதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் பாரம்பரிய அந்தஸ்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.