தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை: ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..
தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை அளித்து ஊழியர்களுக்கு மீஷோ நிறுவனம் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
மாதசம்பளத்திற்கு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு, விடுமுறை என்பதே அரிதான ஒன்றுதான்.. கேஷுவல் லீவ், மெடிக்கல் லீவ் என விடுமுறை பட்டியல்கள் இருக்கும்.. ஆனாலும், அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடிகிறதா என்பது கேள்விக்குறிதான்.. ஏனென்றால் நாம் கேட்கும் சமயத்தில் எல்லாம் விடுமுறை கிடைத்துவிடுவதில்லையே.. இவற்றையெல்லாம் தாண்டி நமக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒன்று , பண்டிகைக்கால விடுமுறைகள் தான்.. வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் கூட அந்த நாட்களில் சொந்த ஊர்களுக்குச் சென்று, சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்கள் அவை.
அப்படி , தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி போன்ற பொது விடுமுறை நாட்களில் மட்டுமே லீவ் கிடைக்கும்.. சில நேரங்களில் இந்த விடுமுறைகள் கூட மகிழ்ச்சியுடன் சேர்த்து அலைச்சலைக் கொடுக்கும்.. ஆம், தீபாவளிக்கு 2 நாட்கள் விடுமுறை என்றால், பலருக்கு அவற்றில் பாதி பயண நேரத்திலேயே கழிந்துவிடும்... சிலருக்கு கொண்டாட்ட களிப்பில் ஓய்வில்லாமல் போய்விடும்.. இன்னும் ஒருநாள் கூடுதலாக விடுமுறை கிடைத்தால் நன்றாக இருக்குமே என பலருக்கு ஏக்கம் தொற்றிக்கொள்ளும்.. இந்தச் சூழலில், வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, ஊழியர்கள் அனைவருக்கும் நீண்ட கால விடுமுறை அறிவித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது மீஷோ நிறுவனம். அதுவும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர்.
அதாவது, அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரையில் மீஷோ நிறுவனம் விடுமுறை அறிவித்திருக்கிறது. ஊழியர்களுக்கு மன ரீதியாக புத்துணர்ச்சி கிடைக்க இந்த விடுமுறை உதவும் என்று மீஷோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெயருக்கு விடுமுறை எனச் சொல்லிவிட்டு, வீட்டிலிருந்து பணி புரிய வேண்டும் என்று சொல்லாமல் இந்த 11 நாட்களும் ஊழியர்களுக்கு முழுமையாக விடுமுறை அளித்திருக்கிறது.
மீஷோ நிறுவனத்தின் இந்த செயல் ஆச்சரியப்படுவதற்கில்லை.. ஏனெனில் மீஷோ இதேபோன்று தொடர் விடுமுறைகளை அறிவிப்பது இந்து 2வது முறையாகும்.. ஊழியர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில், அவர்கள் தங்களை துப்பித்துக் கொள்ளவும், மறுகட்டமைப்பு செய்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மீஷோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் குழைந்தை பிறந்தால், ஆணோ, பெண்ணோ பொதுவாக பெற்றோருருக்கு 30 வாரங்கள் விடுப்பு அளிக்கிறது. அத்துடன் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது..