வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி
நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமர் மோடி வயநாடு நிலச்சரிவை நேரில் பார்வையிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தொடர்பு கொண்டு பேசிய அவர், அங்கு நிலவும் சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
நிலச்சரிவு குறித்து மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் பிரதமர் மோடிக்கு முதற்கட்ட அறிக்கை வழங்கியுள்ளார். இந்நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமர் மோடி வயநாடு நிலச்சரிவை நேரில் பார்வையிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரை விமானம் மூலம் சென்று பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடவுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.