மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் ஒருங்கிணைந்த மாநாடு - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..
டெல்லியில் இன்று அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 39-வது தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது.. இந்த மாநாட்டுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமை தாங்கினார். அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஒரே ஆண்டில் 126 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கூறினார். பின்னர் நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல், சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று ( ஏப்ரல் 30 ) முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டு மாநாடு நடைபெற உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள இந்த கூட்டு கருத்தரங்க மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார். இந்தக்கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் உரை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் ஆலோசிக்கப்பட் உள்ளதாகவும், மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் மற்றும் நீதி வழங்கல் முறையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவைக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் தேவ் உள்ளிட்ட முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காததை அடுத்து, தமிழக அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்என் பண்டாரியும் பங்கேற்கின்றனர். 6 ஆண்டுகளுக்குப்பிறகு தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெறுவதால் எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.