குடியரசுத் தலைவர் விருந்து - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு எம்.பி. ப.சிதம்பரம் கண்டனம்!!

 
P chidambaram

G20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு எம்.பி. ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.  இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  விருந்து அளிக்கிறார்.  இதில்  பங்கேற்பதற்காக அனைத்து முக்கிய தலைவர்களும் குடியரசு தலைவர் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.  

tn

இதனிடையே குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் இரவு விருந்தில், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி,  ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  மல்லிகார்ஜூன கார்கேவை அழைக்காதது, நாட்டின் பெரும்பான்மை மக்களை மதிக்காததற்கு சமம்  என்று  ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.


 


இந்நிலையில் எம்.பி. ப.சிதம்பரம்  தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒன்றிய அரசின் நடவடிக்கையை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை; ஜனநாயகமில்லாத அல்லது எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாட்டில்தான் இதுபோன்ற செயல்கள் நடக்கும். அதாவது பாரதம், ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.