அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

தெலுங்கானாவின் பத்ராசலத்தில் கட்டுமான பணியில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர்.
தெலுங்கானாவின் பத்ராசலம் நகரில் ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் திடீரென பிற்பகலில் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் காயமடைந்தனர். காவல்துறையினரும், மாநில பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கனரக மண் நகர்த்தும் இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய கட்டிடத்தில் அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டுமானமும், தரமற்ற கட்டுமானப் பொருட்களும் விபத்துக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், கட்டிடத்தை கட்டுவதற்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இதுவே விபத்துக்குக் காரணம் என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். பழைய இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் நான்கு தளங்கள் கட்டப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்ததாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.