மைசூரு : பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து..
மைசூரில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்து காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு புகை சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மைசூர் நகரில் உள்ள ஹூப்ளி தொழிற் பூங்காவில் தனியார் பட்டாசு ஆலை குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த குடோன் முழுவதுமாக பட்டாசுகள் வெடித்து, தீப்பிடித்து எழுந்ததில் இடிந்து விழுந்து தரைமட்டமாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி இதைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கட்டிடங்களும் தீ விபத்து காரணமாக கடுமையான சேதங்களை சந்தித்திருக்கிறது. இந்த குடோனுக்குள் எத்தனை பேர் வேலை செய்து கொண்டிருந்தனர், அருகில் இருந்த கட்டிடங்களில் இருந்து எத்தனை பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்கிற தகவல்கள் தெரியவரவில்லை.
மைசூர் நகரில் இருந்து சுமார் 14 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் ஏராளமானோர் இந்த கட்டிடத்திற்கு சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீயை அணைக்க இன்னும் பல மணி நேரம் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குடோனில் இருந்த பட்டாசுகள் முழுமையாக வெடித்து எரிந்திருக்கக்கூடிய சூழலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த வெடி விபத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு விபத்தின் தீவிரம் இருந்ததாக தெரிகிறது. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து , தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.