"கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டம் ரத்து" - வேளாண் அமைச்சர் தகவல்!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தினர். வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய அமைப்புகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. விவசாயிகள் உறுதியுடன் போராடினர். அவரின் சத்தியாகிரகத்திற்கு கிடைத்த வெற்றியாக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி.
போராட்டக்களத்திலிருந்து திரும்பிச் செல்லுமாறு அவர்களிடம் கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த விவசாய அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்தன. இருப்பினும் முழுவதுமாக ரத்துசெய்யும் வரை போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை என அறிவித்தனர். முழுவதுமாக சட்ட நடைமுறைகள் முடிந்தால் தான் வாபஸ் பெற யோசிப்போம் என்றார்கள். இதனிடையே நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இதில் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இச்சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தோமர், "நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும். ஆகவே விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு வீடு திரும்ப வேண்டும்" என்றார்.