தேசிய பேரிடர் மீட்பு படையின் ட்விட்டர் ஐடி ஹேக்... டிஜிட்டல்மயத்திற்கு ஆப்பு வைக்கும் ஹேக்கர்கள்!
இந்தியாவில் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளையும் செய்து வருகிறது. ஆனால் அதற்கு ஊறு விளைவிக்கும் விதமாக அரசு துறைகளின் ட்விட்டர் கணக்குகளையே ஹேக்கர்கள் ஹேக் செய்கின்றனர். ட்விட்டர் கணக்கையே ஒரு அரசால் ஹேக் செய்வதிலிருந்து தடுக்க முடியவில்லை. இவ்வாறு இருக்கையில் பல கோடிக்கணக்கான இந்தியர்களின் தரவுகள் அடங்கிய அரசு துறைகளின் வலைதளங்களை எப்படி பாதுகாக்க போகிறீர்கள் என மத்திய அரசை நோக்கி கேள்வி எழுந்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி நள்ளிரவில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கையே ஹேக்கர்கள் ஹேக் செய்தனர். அவ்வாறு ஹேக் செய்த பின்னர், இந்தியா பிட்காயினை அங்கீகரித்துவிட்டதாக போலியான பதிவையும் பதிவிட்டிருந்தனர். உடனே பிரதமர் அலுவலகம் விளக்கம் தெரிவித்தது. கணக்கு மீட்கப்பட்டதாகவும் தகவல் கூறியது. அதேபோல கடந்த ஜனவரி 3 அன்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு (IMA), உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில் (Indian Council of World Affairs), மகிலா வங்கி (Mann Deshi Mahila Bank) ஆகியவற்றின் ட்விட்டர் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டன.
10 நாட்களுக்கு முன்னர் தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. பின்னர் அந்த கணக்கு மீட்கப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையின் (என்டிஆர்எஃப்) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் நேற்று ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விஷமத்தனமான கருத்துகளையும் ஹேக்கர்கள் பதிவிட்டனர். அந்தக் கணக்கின் முகப்பு படமும் என்டிஆர்எஃப் குறித்த பயோடேட்டாவும் நீக்கப்படவில்லை. தொழில்நுட்ப வல்லுநர்கள் துரிதமாக செயல்பட்டு ட்விட்டர் கணக்கை மீட்டுள்ளனர்.