நீட் தேர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
நீட் தேர்வு காரணமாக இளங்கலை மருத்துவக் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. அண்மையில் கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் போடுவதில் மாறுபாடுகள் குறிப்பிட்ட ஒரு பயிற்சி மையத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள் ஒரே அளவு எண்ணிக்கையில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் தேர்வானது.

இதே போல் 67 மாணவர்கள் ஒரே அளவு மதிப்பெண் பெற்றது போன்ற ஏராளமான குளறுபடிகளும், முரண்பாடுகளும் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையும், ஒன்றிய அரசும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியதுடன்.. நீட் தேர்வு நடத்துவதில் ஏற்படும் குளறுபடிகளால் மருத்துவக் கல்வியின் புனிதத் தன்மை பாதித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வருகிற 21 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.


