டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியீடு..
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட உள்ளன.
நாடு முழுவதும் கொரோனா 3 வது அலையின் தாக்கம் குறைந்து, தற்போது தான் மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருகின்றனர். கடந்த வாரங்களில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து நிம்மதியளித்தது. ஆனால் தற்போது நடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அத்துடன் சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸிலிருந்து உருமாறிய எக்ஸ் இ கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சமும் இருந்து வருகிறது.
அண்மையில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி ‘கொரோனா முடிந்து விட்டதாக எண்ணக்கூடாது.. கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் நிறுத்திவிடக்கூடாது’ என்றும் கூறியிருந்தார். அதற்கேற்ப கேரளா, ஹரியாணா, டெல்லி, குஜராத் உட்பட சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. அந்தவகையில் டெல்லியில் கடந்தவாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 26 சதவீதம் அதிகரித்துள்ளனர். அதாவது அங்கு ஒரு வாரத்தில் 943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதற்கு முந்தைய வாரத்தில் 751 பேர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு குறைந்ததால் டெல்லியில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனையடுத்து அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் டெல்லியில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு அறிவிக்க உள்ளது.
இதுகுறித்து பேசிய டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, கொரோனா குறித்து அச்சமடைய தேவையில்லை ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். கொரோனா வைரஸ் அதிகரிக்கும் சூழலில், அதனுடன் வாழ நாம் பழகி கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் , நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பள்ளிகளுக்கான ஒரு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.