கதிகலங்க வைக்கும் ஒமைக்ரான்... டிச.28 முதல் இரவு ஊரடங்கு; புத்தாண்டு பார்ட்டிக்கு தடை!
ஒமைக்ரான் எனும் புதிய உருமாறிய கொரோனா உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 422 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவெடுத்துள்ளன. குறிப்பாக தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதேசமயம் கொரோனா ஹாட்ஸ்பாட்களை கண்டறிந்து, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து தீவிர கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. தற்போது கர்நாடக மாநிலம் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியளவில் ஒமைக்ரான் அதிகம் பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது மகாராஷ்டிரா. அங்கு 108 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் கர்நாடகா ஏழாவது இடத்தில் உள்ளது. ஆகவே மேலும் தொற்று பரவல் இருப்பதற்காக டிசம்பர் 28ஆம் தேதியிலிருந்து அடுத்த 10 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. இதன்மூலம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் மறைமுகமாக தடை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.