மிகவும் ஆபத்தான ஓமைக்ரான் கொரோனா இந்தியாவில் பரவுவதை தடுக்க வேண்டும்!

 
corona virus

முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "உலகில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான காலம் வந்து விட்டதாக அனைவரும் நிம்மதி அடைந்திருந்த வேளையில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த 24&ஆம் தேதி கண்டறியப்பட்ட  புதிய வகை உருமாறிய கொரோனா குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையே இத்தகவல்கள் வலியுறுத்துகின்றன.

corona

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா ஆப்பிரிக்கக் கண்டத்தில் நமிபியா, போஸ்த்துவானா, எஸ்வாதினி, மொசாம்பிக், மலாவி, ஜிம்பாப்வே, செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும், ஆப்பிரிக்காவுக்கு வெளியில் ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் பரவியிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள மேலும் பல நாடுகளிலும் இந்த வகை கொரோனா பரவியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இனிவரும் நாட்களில் சோதனைகள் மூலம் இது உறுதி செய்யப்படலாம்.

உருமாறிய பி.1.1.529 வகை கொரோனாவுக்கு ஓமைக்ரான் என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இது மிகவும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் (Variant of Concern) என்று அந்நிறுவனம்  வகைப்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவற்றை உலக சுகாதார நிறுவனம் 4 வகைகளாக பிரித்திருக்கிறது. அவற்றில்  மிகவும் ஆபத்தான பிரிவாக ஓமைக்ரான் கொரோனாவை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருப்பதிலிருந்தே அதன் தீவிரத் தன்மையை புரிந்து கொள்ள முடியும்.

corona

இதுவரை மிகவும் ஆபத்தான வைரசாக அறியப்பட்டது டெல்டா வகை தான். தமிழ்நாடு உட்பட இந்தியாவில்  இரண்டாவது அலையின் போது கோடிக்கணக்கானவர்களை பாதித்ததுடன், லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது டெல்டா வகை கொரோனா தான். டெல்டா வகை வைரஸ் 15 முறை உருமாற்றம் அடைந்ததால் ஏற்பட்டதாகும். ஆனால், ஓமைக்ரான் வகை வைரஸ் அதை விட இரு மடங்குக்கும், அதாவது 30 முறைக்கும் மேலாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதேபோல், மனித செல்களை பற்றுவதற்கான  ஓமைக்ரான் வகை கொரோனாவின் கால்கள் (Spike Protein) 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளன.

அதிலும் அண்மையில் ஏற்பட்ட மூன்று உருமாற்றங்கள் இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதற்கும், மனித உடலின் செல்களில் எளிதாக ஊடுருவதற்கும் வகை செய்கின்றன. அதுமட்டுமின்றி, கடைசியாக ஏற்பட்ட இரு உருமாற்றங்கள் ஓமைக்ரானில் இணைந்து இருப்பதால், இவ்வகை வைரஸ் பரவலை தடுப்பூசியால் எளிதில் தடுக்க முடியாது என்றும், இந்த வகை கொரோனாவைத் தடுக்கும் தடுப்பூசிகளின் திறன் 40% குறைவாகவே இருக்கும் என்றும் இங்கிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி தி டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இந்தியா உணர வேண்டும்.

ramadoss

ஓமைக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் உயிரிழப்பு விகிதம் குறித்து இனி தான் தெரியவரும். ஆனால், இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் 320% அதிகரித்து இருப்பதும், ஐரோப்பிய நாடுகளில் தினசரித் தொற்று ஜெர்மனியில் 76,000, இங்கிலாந்தில் 50,000 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பது இதன் தீவிர பரவும் தன்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளன. இரண்டாவது அலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில், இந்திய, தமிழக அரசுகள் ஓமைக்ரான் கொரோனாவின் ஆபத்தை உணர்ந்து அதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதன் ஒரு கட்டமாக ஓமைக்ரான் தொற்று பரவியுள்ள நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் தினசரி கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் விமானப் பயணிகளிடம் கொரோனா ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்; தேவைப்பட்டால் தனிமைப்படுத்துதல்  முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை 30%க்கும் கீழாக குறைந்து விட்டது. நிலைமையின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தி  முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்; ஓமைக்ரான் பரவலைத் தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.