பிரதமர் மோடி விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் - எதிர்க்கட்சிகள் அதிரடி!

 
Opposition Opposition

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் வரை போராட்டத்தை தொடருவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். 

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 3 நாட்களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.  

Rajya Sabha


 
இந்த நிலையில், இன்று 4வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்றது. மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத்தின்   எதிர்க்கட்சி தலைவருக்கான அறையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், அதுவரை தங்களது போராட்டத்தை தொடருவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.