பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது..!!
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 அன்று, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அது சுற்றுலாத் தலம் என்பதால் அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். ஆகையால் துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்; 16 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று கைது செய்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் கண்டுபிடித்துள்ள என்.ஐ.ஏ, பஹல்காம் பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அகமது ஜோதர் மற்றும் பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரும் , தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் தளவாட ஆதரவை வழங்கியதாக NIA தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன், பயங்கரவாதிகளை ஹில் பார்க் பகுதியில் உள்ள ஒரு தற்காலிகக் குடிசையில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
என்.ஐ.,ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையின்போது பர்வேஸ் மற்றும் பஷீர் இருவரும் தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளங்களை தெளிவாக தெரிவித்திருப்பதாகவும், அவர்கள் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 இன் பிரிவு 19 இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


