பதஞ்சலி வழக்கு - உத்தரகாண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!!

 
tn

பாபா ராம்தேவ் தாக்கல் செய்த நிபந்தனை அற்ற மன்னிப்பை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத் பேஸ்ட் ,  சோப்புகள் , தேன் , ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.  இந்த பொருட்கள் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும் விளம்பரம் செய்யப்பட்டன. இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. குறிப்பாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களில் அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துகளும் இருந்தன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்தவுடன் எந்த ஒரு தவறான விளம்பரங்களையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியது. 

tn

இருப்பினும் பதஞ்சலி நிறுவனம் இது போன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இதைத்தொடர்ந்து வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த நிலையில் பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  அத்துடன் அதன் நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இந்த நோட்டீஸ் குறித்து பதிலளிக்காத நிலையில் பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.  இதையடுத்து நோட்டீஸ் குறித்து  பதிலளித்த பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.  

அத்துடன் பதஞ்சலின் மருந்து பொருட்களின் தவறான விளம்பரத்திற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக பாபா ராம்தேவ்  உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கூறினார். ஆனால் அவரின் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்நிலையில் சட்டவிதிகளை பதஞ்சலி நிறுவனம் பலமுறை மீறியுள்ளது; ஒவ்வொரு முறையும் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று  மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  அதற்கு உத்தராகண்ட் மாநில  அரசு , பதஞ்சலி நிறுவனம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தது. 

supreme court

இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் , இவ்வளவு காலம் அமைதியாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருந்து விட்டு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த பிறகு நடவடிக்கை எடுப்போம் என்றால் என்ன அர்த்தம்? மாநில அரசு எதற்கு உள்ளது? விதிகள் மீறப்படும் போது நடவடிக்கை எடுக்கத்தான் அதிகாரிகள் உள்ளனர். இந்த விவகாரத்தில் பதஞ்சலி நிறுவன உரிமத்திற்கு ஒப்புதல் வழங்கிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்

தவறுகள் பல நிகழ்ந்தபோது, கண்ணை மூடிக்கொண்டு இருந்துள்ளீர்கள். உங்கள் செயல்பாடுகள் குற்றவாளிகளோடு இணைந்து நீங்களும் கூட்டுச் சதியில் ஈடுபட்டீகள் என கருத வைக்கிறது என்று உச்ச நீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்தது. வழக்கை வேறொரு நாளுக்கு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும்  நிராகரித்தது.