திருவிழாவை காண வந்த மக்கள்.. கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு..
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஒரிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவிலில் தேர் திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒடிசா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். ரத யாத்திரையின் முதல் நாளிலேயே 600க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தனர். மூன்றாவது நாளான இன்று பூரி ஜெகன்நாதர் ரதத்தை பார்ப்பதற்காக அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

அப்போது மரங்கள் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் மக்கள் கூட்டமாக இருந்த பகுதியை நோக்கி வந்துள்ளது. இதை கண்டதும் ஒரே நேரத்தில் மக்கள் அங்கிருந்து செல்ல முயன்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். புவனேஸ்வரின் நயப்பள்ளியைச் சேர்ந்த பிரேம் காந்த மோகந்தி (78), அதந்தர் பலிபட்னாவின் பிரபாத்தி தாஸ் (52), கோர்டாவின் பாசாந்தி சாஹோ (42) ஆகியோர் இறந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்த போலீசார் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் புரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆபத்தான நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.


