மணிப்பூர் விவகாரம் குறித்து பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடத்த தயார் - பியூஷ் கோயல்
மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்து பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடத்த தயார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், பெண்களுக்கு நடந்த கொடூரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 7 நாட்களாக முடங்கியது. இந்த நிலையில், இன்று 8வது நாளாக கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளும் தொடங்கிய சிறிதி நேரத்திலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கம் போல் அமளியில் ஈடுபட தொடங்கினர். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம். பிர்லா அறிவித்தார்.
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பேசிய பியூஷ் கோயல், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் 2 மணிக்கு விவாதம் நடத்த தயாராக உள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவராக பயன்படுத்துகின்றனர். மணீப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக உள்ள போதும், எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை ஏன கூறினார்.