கர்நாடகாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

 
Modi

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையாக இருப்பதாக  பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.  

கர்நாடகா மாநிலத்தில்  வருகிற 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.  இதனையொட்டி பிரதமர் மோடி நேற்று தனது பரப்புரையை தொடங்கினார். இரண்டாவது நாளாக இன்று கோலார் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அப்போது பேசிய அவர், “இன்றைய கூட்டம் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தூக்கத்தை இழக்க செய்யும். இந்த இரண்டு கட்சிகளும் வளர்ச்சி போக்கில் மிகப் பெரிய தடையாக இருக்கின்றன. அவர்களை மக்கள் கிளீன்போல்டு ஆக்குவர். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஊழல் அரசிடம் இருந்து கர்நாடக மக்களை காப்பாற்ற வேண்டும்.

pm modi

நிலையற்ற அரசாங்கங்களுக்கு தொலைநோக்கு பார்வை இருக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா மீது உலகம் நம்பிக்கையில்லாமல் இருந்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக உலகம் பார்க்கிறது. பா.ஜனதா அரசை தேர்ந்தெடுக்க கர்நாடக மக்கள் தயாராகி விட்டனர். தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசு மிகவும் முக்கியமானது.

காங்கிரஸ் ஒரு காலாவதியான இயந்திரம். அவர்களால் வளர்ச்சி தடைப்பட்டது. காங்கிரஸ் போலியான உத்தரவாதங்களை அளித்தது. மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் பொதுமக்களுக்கு துரோகம் செய்தனர். ஆனால் பா.ஜனதா பல வளர்ச்சி பணிகளை செய்து அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார்.