பாஜக மூத்த தலைவர் சத்யபிரதா முகர்ஜி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்..
முன்னாள் மத்திய அமைச்சர் சத்யபிரதரா முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் உள்ள பழம்பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர். கடந்த 1999-ம் ஆண்டு கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகர்ஜி, அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றி இருக்கிறார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் பா.ஜ.க. முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். ஜோலு பாபு என்று அழைக்கப்படும் முகர்ஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு சத்யபிரதா முகர்ஜி, இன்று தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 90. இந்நிலையில் சத்யபிரதா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “முன்னாள் மத்திய அமைச்சர் சத்யபிரதரா முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியவர். சட்ட விசயங்களில் மதிநுட்பம் வாய்ந்தவராகவும், சாமர்த்தியசாலியாகவும் திகழ்ந்தவர். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.