எல்.இ.டி பல்புகளால் ஆண்டுக்கு 4,500 கோடிக்கும் கூடுதலான மின்சாரம் சேமிப்பு - பிரதமர் மோடி..

 
pm modi

எல்.இ.டி. பல்புகளால் ஒவ்வோரு  ஆண்டும் 4,500 கோடிக்கும் கூடுதலான யூனிட் மின்சாரம்  சேமிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடந்து வரும் ஜி20  மின்சார அமைச்சர்களுக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “ பசுமை வளர்ச்சி மற்றும் ஆற்றல் பரிமாற்றத்திற்கான பெரிய முயற்சிகளை இந்தியா உருவாக்கி வருகிறது.   உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நாம் இன்னும் நம்முடைய பருவகால உள்ளார்ந்த ஈடுபாடுகளில் வலிமையாக செயல்பட்டு வருகிறோம்.   புதைபடிவமில்லாத மின்சார சாதனங்களை நிறுவி 9 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கை அடைந்து சாதனை படைத்து இருக்கிறோம். இதனை தொடர்ந்து, நாம் பெரியதொரு இலக்கை வைத்திருக்கிறோம்.

led bulb

இதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் புதைபடிவமில்லாத எரிசக்தி சாதனங்களை 50 சதவீதம் என்ற அளவில் நிறுவுவது என்ற சாதனையை படைக்க திட்டமிட்டு இருக்கிறோம். சூரிய மற்றும் காற்று எரிசக்தியை பயன்படுத்தும் சர்வதேச நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில், கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பை நாங்கள் வழங்கி உள்ளோம். ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் என்ற வரலாற்று மைல்கல்லையும் நாம் எட்டியுள்ளோம்.

அனைத்தும் உள்ளடக்கிய, விடாமுயற்சி, சமத்துவம் மற்றும் நீடித்த மின்சாரம் ஆகியவை அனைவருக்கும் கிடைக்க கூடிய வகையில் பணியாற்றுவது எங்களுடைய முயற்சியாக இருக்கும். 2015-ம் ஆண்டில் நாங்கள் ஒரு சிறிய இயக்கம் வழியே எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தும் திட்டம் ஒன்றை தொடங்கினோம். இது உலகில் பெரிய எல்.இ.டி. விநியோக திட்டம் ஆக உருமாறியது. இதனால், ஒவ்வோர் ஆண்டும் 4,500 கோடிக்கும் கூடுதலான யூனிட் மின்சாரம் நமக்கு சேமிக்கப்படுகிறது” என்று கூறினார்.