திடீரென பேட்டி கொடுத்த பிரதமர் மோடி.. அனைத்து எம்பிக்களுக்கும் முக்கிய கோரிக்கை!
பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடப்பாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்காம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார். ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கலாகிறது. அந்த வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றே தொடங்கிவிட்டது. அதாவது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியுள்ளது. இதற்குப் பின்னர் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது. நாளை காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும்.
இச்சூழலில் நாடாளுமன்ற வளாகம் வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு திடீரென பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வரவேற்கிறேன். இன்றைய உலக நிலவரப்படி இந்தியாவிற்கு அதிக வாய்ப்ப்புகள் உள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து உலக நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் திறந்த மனதுடன் விவாதங்கள் நடைபெற வேண்டும். அப்போது தான் உலகளாவிய தாக்கத்திற்கு முக்கிய வாய்ப்பாக அமையும். அனைத்து உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் திறந்த மனதுடன் மிகச் சிறப்பான முறையில் விவாதங்களை நடத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன். நிச்சயமாக ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அடிப்படையில் கூட்டத்தொடரையும் விவாதத்தையும் பாதிக்கும் என நான் நினைக்கிறேன்.
இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் முக்கிய கோரிக்கையை வைக்கிறேன். தேர்தல்கள் வரும் போகும். ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது ஒரு ஆண்டில் நாட்டின் வளர்ச்சிக்கான புளுபிரிண்ட் போன்றது. ஆகவே இந்த கூட்டத்தொடரை மிகச் சிறப்பான முறையில் நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வரும் காலங்களில் நாட்டின் பொருளாதாரம் உயரத்தை தொட வழிவகுக்கும்” என்றார். பிரதமர் இவ்வாறு பேசினாலும் மத்திய அரசு மீது பெகாசஸ் என்ற கத்தி தொங்குகிறது. பெகாசஸ் விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளதால் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப வியூகம் வகுத்துள்ளன.