பயம் காட்டும் ஓமைக்ரான்... அதிகாரிகளுடன் அவசர மீட்டிங் - பிரதமர் மோடி ஏற்பாடு!
இந்தியாவை இரண்டாம் அலை உலுக்க காரணம் டெல்டா எனும் உருமாறிய கொரோனா தான். இது சாதாரண கொரோனாவை காட்டிலும் 50% வேகமாகப் பரவக் கூடிய தன்மை கொண்டது. இந்த வைரஸ் பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்கும் அடுத்தடுத்த அலைகளை உருவாக்கியது. பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் இச்சமயம் வெளிவந்திருக்கும் செய்தி மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை.
காரணம் ஓமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா. கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் தான் இந்த உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த காரணம் இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களையும் எளிதில் தாக்கக் கூடிய ஆற்றல் படைத்தது ஓமைக்ரான். இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் செய்த பிறகே அதன் தன்மையை அறிய முடியும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். ஆகவே இரு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் அஜாக்கிரதையாக இருக்காமல் அவர்களும் தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளது.
இதன் காரணமாக பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான விமான சேவைகளை ரத்துசெய்துள்ளன. மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ள மத்திய அரசு, தென் ஆப்பிரிக்க வகை வைரஸ் பரவல் காணப்படும் நாடுகளிலிருந்து வருவோரை மிக தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடி சுகாதார துறை உயர் அதிகாரிகளிடம் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இதில் ஓமைக்ரான் வைரஸ் குறித்தும் தடுப்பூசி முகாம் குறித்தும் விவாதிப்பார் என சொல்லப்பட்டுள்ளது.