நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமை அடைந்துள்ளது - குடியரசு தலைவர் வாழ்த்து
உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிசுற்று நடத்தப்பட்டது. இந்த இறுதிப்போட்டியில் 3 இந்தியர்கள் உள்பட 12 வீரர்கள் களம் கண்டனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில், அதனை பூர்த்தி செய்யும் விதமாக இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள பதிவில், நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமை அடைந்துள்ளது. அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.