மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா..

 
மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா..


டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை,  காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.  

 இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை  பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்கனவே  கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.  இதனையடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த  மேரி கோம் தலைமையில் 6  பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் விசாரணை நடத்தி  அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துவிட்டது.  

மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா..

இந்நிலையில் மீண்டும்  கடந்த 6 நாட்களாக  வீரர் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்ஜ் பூஷன் பாஜக எம்.பி., என்பதால்  அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்..  ஆனால் அந்த கமிட்டியின் விசாரணை அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.  இந்த சூழலில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரவு பகலாக கடந்த 6 நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா..

 இதற்கிடையே பாலியல் புகார் குறித்து  8 வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து  பிரிட்ஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.   அதனை தொடர்ந்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  வீராங்கனைகள் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோருடன் சில நேரம்  தனியாக பேசிய  பிரியங்கா காந்தி,  போராட்டத்திற்கு துணை நிற்பதாக தெரிவித்திருக்கிறார்.