ஆன்லைன் விளையாட்டு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

 
ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  

ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விதிமுறைகள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறை விதிகளின் கீழ் அரசு அறிவித்திருக்கிறது.  இதனைத்தொடர்ந்து  ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த இறுதி வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப ராஜாங்க அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பல்வேறு சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் (எஸ்.ஆர்.ஓ.) இருக்கும். கட்டமைப்புகள் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அனுமதியை அவை முடிவு செய்யும். பல்வேறு தனியார் நிறுவனங்கள், சுய ஒழுங்குமுறை அமைப்புக்கான மாதிரியை அளித்துள்ளன.

மத்திய அரசு

இது குறித்து அவற்றுடன் விவாதிக்கப்படும். சுய ஒழுங்குமுறை அமைப்பினை அரசு அறிவிக்கும். இது தன்னாட்சி அமைப்பாக இருக்கும். நாங்கள் 3 சுய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் தொடங்குவோம். உண்மையான பணத்தை கையாள்கிற ஆன்லைன் விளையாட்டுகளும், பந்தயம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளும் அனுமதிக்கப்படாது. பணம் சேகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கே.ஒய்.சி. என்னும் வாடிக்கையாளர்கள் பற்றிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைனில் மத்திய அரசு பற்றிய தவறான தகவல்களை வெளியிடும் பிரச்சினையில், மத்திய அரசு ஒரு நிறுவனத்தை எங்கள் அமைச்சகம் மூலம் அறிவிக்க முடிவு செய்துள்ளது. அந்த அமைப்பு, ஆன்லைனில் உள்ள அனைத்து உள்ளடக்க அம்சங்களையும் சரிபார்க்கும்” என்று கூறினார்.