"கொரோனாவை சாதாரணமாக எடை போட்டேன்; ஆனால்.." - முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்!
திருவள்ளுவர் சிலை திறப்பு மற்றும் திலசை ரத்தினப்பா நூல் வெளியீட்டு விழா திலாசுப்பேட்டை தளிஞ்சை காளியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "நான் தடுப்பூசி செலுத்தாமல், மாஸ்க் அணியாமலேயே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். வெற்றி பெற்று, முதலமைச்சராகப் பதவியேற்ற மறுநாளே கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டேன்.
நன்கு சாப்பிட்டு, தினமும் விளையாடுவதால் என் உடல் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டேன். ஆனாலும் என்னை கொரோனா தாக்கியது. தற்போது நான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டேன். எனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. கொரோனா பரவாமல் தடுக்க நாம் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்த யாரும் பயப்பட வேண்டாம்.
சத்தான சாப்பாடு சாப்பிட்டால் நன்றாக இருப்போம் என நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த தொற்று எப்படி வருகிறது என்று தெரியவில்லை. கண்ணுக்கு தெரியாத தொற்றினால் பெரியளவில் பாதிப்பு இருந்து கொண்டிருந்தது. ஆனால் தடுப்பூசி வந்த பிறகு அது குறைந்துள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் 75% வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும். அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.