மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடக்கவே பிரதமர் விரும்புகிறார் - ராகுல் காந்தி

 
rahul

மணிப்பூரில் எரியும் தீயை அணைக்க பிரதமர் விரும்பினால் இரண்டே நாட்களில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம் ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து வன்முறை நடக்கவே விரும்புகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்திற்கும், மெய்தி இன மக்களுக்கும் கடந்த மே மாதம் தொடக்கம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறிய நிலையில், அந்த மாநிலமே போர்க்களமாக காட்சி அளித்து வருகிறது. வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயம அடைந்துள்ளனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த நில நாட்களுக்கு முன்னர் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

manipur

இதனிடையெ மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் சித்தாந்தம் மணிப்பூர் மாநிலத்தை கொளுத்திவிட்டது. அந்த தீ 3 மாதங்களுக்கும் மேலாக பற்றி எரிகிறது. மக்கள் கொல்லப்படுகிறார்கள், குழந்தைகள் கொல்லப்படுகின்றனர், பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.  மணிப்பூரில் எரியும் தீயை அணைக்க பிரதமர் விரும்பினால் இரண்டே நாட்களில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம். ராணுவத்தின் மூலம் இரண்டே நாட்களில் மணிப்பூரில் நிலமையை கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் பிரதமர் அதை செய்ய விரும்பவில்லை. மாறாக அவர் மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடக்கவே விரும்புகிறார். இவ்வாறு கூறினார்.