நாடு முழுவதும் சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - ராகுல் காந்தி

 
rahul

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்க மறுக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தாக்கல் செய்தார். பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது. தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேறியது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் சுமார் 8 மணி நேர விவாதத்துக்குப் பின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  454 பேர் ஆதரவும், 2 எம்பி-க்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். வாக்குச்சீட்டின் அடிப்படையிலான வாக்கெடுப்பில் அறுதி பெரும்பான்மை வாக்குகளை பெற்று மசோதா நிறைவேறியது. இதேபோல் நேற்று இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 

Parliament

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அரசு செயலாளர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். இந்தியாவின் முதுகெலும்பாக ஓபிசி பிரிவினர் உள்ளனர்;நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும்.  பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்க மறுக்கிறது என கூறினார்.