சிறை தண்டனையை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி

 
rahul gandhi

சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி ஒரு சமூகத்தையே திருடர் என கூறியுள்ளார் என குற்றம்சாட்டி ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மோடி சமூகம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.  அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக  ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து,  அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக  30 நாட்கள் அவகாசம் அளித்து  நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது. இதனிடையே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து அவர்கள்  தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை  எடுத்துள்ளது. 

இந்நிலையில், சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி நாளை சூரத் செல்லவுள்ளார்.