தடுப்பூசி செலுத்தினால் ரூ.50 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட்போன் பரிசு - நகராட்சி அறிவிப்பு!
ஒமைக்ரான் கொரோனா பரவல் தடுப்பூசியின் முக்கியவத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. ஏனென்றால் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளாக்குவதாக உலக சுகாதார அமைப்பின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல இருப்பதிலேயே ஆபத்தான டெல்டா கொரோனாவை விட 5 மடங்கு அதி வேகத்தில் பரவக் கூடியது என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆய்வு முழுமையடையும்போது அதன் தன்மை, பரவல் வேகம் அனைத்தும் தெரியவரும்.
இதனால் உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்தியுள்ளன. இந்தியாவும் அதிக தடுப்பூசிகளைச் செலுத்த திட்டமிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேச அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவோருக்கு குலுக்கல் முறையில் பரிசு அளிக்கப்பட்டு வருகின்றன. இதனை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், மாநகரட்சி, நகராட்சி அமைப்புகள் செய்து வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் நகராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது ராஜ்கோட்டில் டிசம்பர் 4ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிக்குள்ளான காலக்கட்டத்தில் 2ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் அமித் அரோரா கூறியுள்ளார்.