9ஆம் முறையாக "ரெப்போ" மாற்றமில்லை... கடன் வாங்கியவர்களுக்கு சூப்பர் செய்தி!
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இதன்மூலம் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலேயே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆர்பிஐ தொடர்ந்து 9ஆவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்கிறது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களும் அவசியமான ஒன்று.
ரெப்போ வட்டி விகிதம் என்றால் ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம். இந்த விகிதம் குறையும் பட்சத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் குறைவான வட்டி விகிதத்தையே விதிக்கும். ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தை நடத்துவது வழக்கம். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் இதே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட முடிவுகளின்படி, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% என்ற அளவில் தான் இருக்கிறது. இன்னும் இரு மாதங்களுக்கு இதில் மாற்றமிருக்காது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-2022 நிதியாண்டிற்கான நுகர்வோர் பணவீக்கம் 5.3 சதவீதமாக அதிகரிக்கும். இந்த பணவீக்க விகிதம் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.