தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு

 
Revanth Reddy

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். 

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை தொடர்ந்து அவரும் ரேவந்த் ரெட்டியை ஆட்சி அமைக்க அழைத்தார். 

இந்த நிலையில், இன்று தெலங்கானாவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி தெலங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தனர். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.